இந்தியாவிற்கு எதிராக அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட உள்ளோம்- டாம் லேதம்!

Updated: Fri, Oct 11 2024 10:40 IST
Image Source: Google

நியூசிலாந்து அணியானது சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும் இலங்கை அணியிடம் படுதோல்வியைத் தழுவியதுடன், ஒயிட்வாஷ் ஆனது. 

இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 37,50 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எதிவரும் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் அடங்கிய டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி இந்த அணியில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இடம்பிடித்துள்ள நிலையிலும், காயம் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகியுள்ளது.  இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் சாப்மேனிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம் இந்த அணியில் இடம்பிடித்துள்ள மைக்கேல் பிரேஸ்வெல் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்றும் கூறியுள்ளது.

அதேசமயம் இஷ் சோதி இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இணைவார் என்பதையும் தெரிவித்துள்ளனர். இதுதவிர, டாம் பிளண்டல், கிளென் பிலீப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, டிம் சௌதீ, அஜாஸ் படேல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அச்சமற்ற கிரிகெட்டை விளையாடவுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,  “இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது ஒரு உற்சாகமான சவாலாக இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு விளையாடும் போது சவால்களை சந்தித்துள்ளோம். அதனால் இம்முறை கொஞ்சம் சுதந்திரமாகவும், பயப்படாமல் விளையாட முயற்சி செய்ய உள்ளோம். அப்படிச் செய்தால் நாங்கள் தொடரை வெல்லவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

Also Read: Funding To Save Test Cricket

இந்தியாவில் கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அணிகள், அவர்களுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக விளையாடியுள்ளதை நான்கள் கவனித்துள்ளோம். குறிப்பாக பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதன் முலம் இந்திய அணியை அழுத்ததில் வைக்க முடியும். அதனால் ஏதாவது நடக்கும் என்று உட்கார்ந்து காத்திருப்பதற்குப் பதிலாக அவர்களை அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டும். அதனால் இம்முறை நாங்கள் அப்படியான அனுகுமுறையை பின்பற்ற விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை