ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், டெவன் கான்வே 56 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.

Advertisement

இதன்பின் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே சரியாக அமையவில்லை. சுனில் நரைன் (0) மற்றும் ஜெகதீஷன் (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்பின் களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் (20) மற்றும் நிதிஷ் ராணா (27) ஆகியோரும் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறினர். இதன்பின் களத்திற்கு வந்த ஜேசன் ராய், மொய்ன் அலியின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி கொல்கத்தா ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தார்.

Advertisement

ஜேசன் ராய் – ரிங்கு சிங் கூட்டணி, சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன்னும் குவித்தது. வாணவேடிக்கை காட்டி 19 பந்துகளில் அரைசதம் கடந்த ஜேசன் ராய், 26 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த போது, தீக்‌ஷன்னாவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்தார். ஜேசன் ராய் விக்கெட்டை இழந்தாலும், இறுதி வரை அதிரடி ஆட்டத்தை கைவிடாத ரிங்கு சிங் 33 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், இலக்கு பெரியது என்பதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தநிலையில், சென்னை அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான நிதிஷ் ராணா, சென்னை அணியுடனான இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.இது குறித்து நிதிஷ் ராணா பேசுகையில், “என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 236 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சாதரண விசயம் இல்லை, அதிலும் பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் இது போன்ற கடின இலக்கை எட்டுவது சாத்தியமற்றது. 

எங்களின் இந்த தோல்விக்கு ரஹானேவின் சிறப்பான பேட்டிங்கே முக்கிய காரணம். அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படாமல் மிக அதிகமான ரன்களை கொடுத்ததையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமான சில விசயங்களும் நடந்தது. ஆனால் சென்னை போன்ற வலுவான அணிக்கு எதிராக அதிகமான தவறுகள் செய்தால் வெற்றியை மறந்துவிட வேண்டியது தான்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News