யு19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!

Updated: Sat, Jan 20 2024 22:09 IST
Image Source: Google

அண்டர் 19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 7 ரன்களிலும், முஷீர் கான் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அதார்ஷ் சிங் - கேப்டன் உதய் சஹாரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

அதன்பின் 76 ரன்களில் அதார்ஷ் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 64 ரன்களில் உதய் சஹாரனும் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் ஓரளவு பங்களிக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மருஃப் ம்ரிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மான் ஷிபில் 14, ஜிஷான் ஆலம் 14, சௌத்ரி முகமது ரிஸ்வான் 0, அமின் 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த அரிஃபுல் இஸ்லாம் - முகமது ஷிஹாப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்தனர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அரிஃபுல் இஸ்லாம் 41 ரன்களிலும், மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த முகமது ஷிஹாப் 54 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் சௌமீயா பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் இந்திய அண்டர் 19 அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அண்டர் 19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை