ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனையை முறியடித்த அமெரிக்கா!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருககன தகுதிச்சுற்று போட்டிகள் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் அமெரிக்கா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அல் அமெராத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் சமித் படேல், ஆண்டிரிஸ் கஸ், ஹர்மீத் சிங், மொனாங்க் படேல், முகாமல்லா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய மிலிந்த் குமார் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுக்ளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் அமெரிக்க அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓமன் அணி தரப்பில் ஷகீல் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், அமில் கலீம், சமய் ஸ்ரீவஸ்தவா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி வீரர்களும் அமெரிக்க அணியின் பந்துவீச்சுக்கு எடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியில் ஹம்மத் மிர்ஸா 29 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்டவில்லை. இதனால் ஓமன் அணி 25.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 65 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமெரிக்க அணி தரப்பில் நோஸ்துஷ் கெஞ்சிகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அமெரிக்க அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் 40ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் சாதனையை அமெரிக்க அணி முறியடித்துள்ளது. முன்னதாக இந்திய அணி கடந்த 1985ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 125 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த நிலையில், அதேசமயம் அப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 87 ரன்களில் சுருட்டியதுடன் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே சாதனையாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் தற்போது அமெரிக்க அணியானது பேட்டிங்கில் 122 ரன்களில் ஆல் அவுட்டான நிலையிலும், எதிரணியை 65 ரன்களில் சுருட்டி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணியை சாதனையை முறியடித்து அசத்தியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் இரு அணியும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் கூட பயன்படுத்தவில்லை. இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்து வீச்சாளர்கள் கூட பந்துவீசாத முதல் போட்டி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.