ஹர்திக் இடத்தை இந்த வீரர் பிடித்து விட்டார் - வாசிம் ஜாஃபர்!

Updated: Mon, Feb 21 2022 19:15 IST
Venkatesh Iyer Is Ahead Of Hardik Pandya Regarding T20 World Cup Preparations, Says Wasim Jaffer (Image Source: Google)

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவிதத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்து, 3 விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவைத்திருந்தவர் ஹர்திக் பாண்டியா.

2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் முதுகில் அடைந்த காயத்திற்கு பிறகே அவரது ஃபிட்னெஸ் சரியாக இல்லை. அதன்பின்னர் அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டுவருகிறார் ஹர்திக் பாண்டியா. 2019 உலக கோப்பையில் ஆடிய ஹர்திக் பாண்டியா, அந்த தொடரிலும் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் ஆடினாரே தவிர, பவுலிங் வீசவில்லை. பவுலிங் வீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் அவர் இல்லாததால் தான் பந்துவீசவில்லை. கடந்த ஐபிஎல் சீசனிலும் அவர் பந்துவீசவில்லை.

ஹர்திக்  பாண்டியா பந்துவீசினால் தான் அவர் இந்திய அணியில் இருப்பது பிரயோஜனம். ஏனெனில் அவர் ஒரு ஆல்ரவுண்டராகத்தான் இந்திய அணிக்கு தேவை. டி20 உலக கோப்பைக்கு பிறகு, முழு ஃபிட்னெஸை அடைவதற்காக அவராகவே காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொண்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.

நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடாத ஹர்திக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் எடுக்கப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உருவெடுத்துள்ளனர்.

அதிலும் வெங்கடேஷ் ஐயர் பட்டைய கிளப்பிவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் அதிரடியாக ஆடி சிறப்பாக போட்டியை முடித்து கொடுத்தார். டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை அசாத்தியமாக அடித்து ஃபினிஷர் ரோலுக்கு, தான் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார்.

நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் 19 பந்தில் 35 ரன்களை விளாசி, சூர்யகுமார் யாதவுடன் இணைந்து கடைசி 5 ஓவரில் இந்திய அணி 86 ரன்களை குவிக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார். 2வது போட்டியில்18 பந்தில் 33 ரன்கள் அடித்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். 3வது டி20 போட்டியில் அபாரமாக பந்துவீசி, பொல்லார்டு மற்றும் ஹோல்டர் ஆகிய வெஸ்ட் இண்டீஸின் 2 முக்கியமான, பெரிய வீரர்களை வீழ்த்தி அசத்தினார்.

அதிரடியான பேட்டிங், சிறப்பான பவுலிங் என தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வெங்கடேஷ் ஐயர், ஹர்திக் பாண்டியாவின் இடத்தை கிட்டத்தட்ட பிடித்துவிட்டார். ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸ் எந்தளவிற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தயார் என்றே அறிவிக்கவில்லை. அதனால் தான் அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை என்று தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பெற, இப்போதைக்கு ஹர்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயருக்கே அதிக வாய்ப்பிருப்பதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் ஜாஃபர், “ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கு ஃபிட்டாகிவிட்டாரா என்று தெரியவில்லை. எனவே இப்போதைக்கு வெங்கடேஷ் ஐயர் தான் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா ஆடுவதை பொறுத்துத்தான் அவர் டி20 உலக கோப்பை அணியில் ஆடுவாரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அதனால் இப்போதைக்கு பாண்டியாவை விட, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான ரேஸில் வெங்கடேஷ் ஐயரே முன்னிலையில் இருக்கிறார்.

ஐபிஎல்லில் ஓபனிங்கில் சிறப்பாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், 6ம் வரிசையில் ஃபினிஷர் ரோலையும் சிறப்பாக செய்வது வியப்பாக இருக்கிறது. பவுலிங்கிலும் 2 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். எனவே டி20 உலக கோப்பையில் அவர் கண்டிப்பாக ஆடுவார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை