விஜய் ஹசாரே கோப்பை: கெய்க்வாட் சதத்தில் முதல் வெற்றியைப் பெற்றது மகாராஷ்டிரா!

Updated: Wed, Dec 08 2021 22:25 IST
Vijay Hazare Trophy: Ton-up Gaikwad stars in Maharashtra's high-scoring successful chase (Image Source: Google)

விஜய் ஹசாரே கோப்பை உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் டி-யில் மகாராஷ்டிரா அணி மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர், கேரளா, உத்தராகண்ட், சண்டிகர் அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் 20 வீரர்கள் கொண்ட மகாராஷ்டிரா அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் திரிபாதி, இவர் சீனியர் என்றாலும் ருதுராஜுக்கு உதவியாக துணை கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மத்தியப் பிரதேசத்துடன் மகாராஷ்டிரா தன் முதல் போட்டியில் விளையாடியது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் அணி சுபம் சர்மா, கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா ஆகியோரது அபாரமான சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக சுபம் சர்மா 108 ரன்களையும் கேப்டன் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா 104 ரன்களையும் விளாசினர்.

இதையடுத்து இமாலய இலக்கைத் துரத்திய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்க் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். 

இப்போட்டியில் 112 பந்துகளை எதிர்கொண்ட கெய்க்வாட் 4 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ராகுல் திரிபாதி தனது பங்கிற்கு அரைசதம் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 49.4 ஓவர்களில் மகாராஷ்டிரா அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை