கோலியால் சச்சினை நெருங்கக்கூட முடியாது - முகமது ஆசிப்!

Updated: Fri, Oct 08 2021 18:11 IST
Image Source: Google

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி அதிக சதங்கள்(100 சதங்கள்), அதிக ரன்கள் என பல்வேறு பேட்டிங் சாதனைகளை படைத்து தன்னிகரில்லா தலைவனாக இருந்து வருகிறார்.

அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 43 ஒருநாள் சதங்கள் மற்றும் 27 டெஸ்ட் சதங்கள் என மொத்தம் 70 சதங்களை குவித்துவிட்டார். எனவே அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவதும், இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இதுகுறித்து கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆசிஃப், “கோலி பாட்டம் ஹேண்ட் பிளேயர்(Bottom Hand). கோலி சிறப்பாக ஆடுவதற்கு அவரது ஃபிட்னெஸே காரணம். அவர் சரிவை சந்திக்கும்போது, அதன்பின்னர் அதிலிருந்து அவரால் மீண்டெழவே முடியாது என நினைக்கிறேன். பாபர் அசாம் சச்சின் டெண்டுல்கரை போல அப்பர் ஹேண்ட் பிளேயர்(Upper Hand). பாபர் அசாமின் பேட் மூவ்மெண்ட் சச்சினை போல நல்ல ஃப்ளோவில் இருக்கும். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

சச்சினை விட கோலி சிறந்தவர் என்று சிலர் கூறலாம். ஆனால் நான், இல்லை என்பேன். விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது என்பது என் கருத்து. சச்சின் டெண்டுல்கர் அப்பர் ஹேண்டை பயன்படுத்தி ஆடுவார். அந்த டெக்னிக்கை வெகுசிலரே அறிவார்கள். அதனால் தான் சச்சின் டெண்டுல்கர், கவர் டிரைவ், ஆன் டிரைவ், புல் ஷாட், கட் ஷாட் என அனைத்துவிதமான ஷாட்டுகளையும் அருமையாக ஆடுவார். கோலியிடமும் அனைத்துவிதமான ஷாட்டுகளும் உள்ளன. ஆனால் அவர் பாட்டம் ஹேண்ட் பிளேயர்” என்று முகமது ஆசிஃப் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை