விராட் கோலியின் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி!

Updated: Wed, Aug 03 2022 23:16 IST
Virat Kohli- end of an era? Will the star batsman be able to bounce back and rule the game once agai (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக தான் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது விராட் கோலிக்கு வாய்ப்புள்ளதா என்பது தான். கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஃபார்முக்கு திரும்ப முடியாமல் இருக்கும் அவர், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தும் ஓய்வு கேட்டு பெற்றார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி இடம்பெறுவதற்கு உள்ள கடைசி வாய்ப்பு ஆகஸ்ட் 27ல் தொடங்கவுள்ள ஆசியக்கோப்பை தொடர் மட்டுமே ஆகும். அதில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஓய்வில் இருக்கும் கோலி நேரடியாக ஆசியக்கோப்பை தொடருக்கு வந்துவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் தான் கோலி பெரிய தவறை செய்துள்ளார். விராட் கோலியின் ஷாட் தேர்வுகளில் தவறு இல்லை என்றும், அவரின் மனநிலையில் தான் பிரச்சினை இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. எனவே அவருக்கு மனதளவில் புத்துணர்ச்சி கொடுப்பதற்காக ஜிம்பாப்வே தொடருக்கு அவரை அனுப்புவதற்காக பிசிசிஐ ஏற்பாடு செய்தது.

சிறிய அணியான ஜிம்பாவேவுக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் விளாசினால், அதன் மூலம் அவருக்கு நம்பிக்கை ஏற்படும். எனவே ஆகஸ்ட் 18ஆம் தொடங்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இளம் வீரர்களுடன் கோலியின் பெயர் சேர்க்கப்படவிருந்தது. ஆனால் விராட் கோலி இதற்கு சம்மதிக்காமல், வந்தால் நேராக ஆசியக்கோப்பை தான் என தடாலடியாக கூறியதாக தெரிகிறது. இதனால் ஆசியக்கோப்பையில் பெரிய அணிகளை அவர் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை