டி20 உலகக்கோப்பை: தோல்விக்கான காரணத்தை விளக்கிய பாபர் ஆசாம்!

Updated: Sun, Oct 23 2022 22:12 IST
Virat Kohli is a big player: Babar Azam urges Pakistan batter to learn handling pressure from India (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சான் மசூத் 52* ரன்களும், இஃப்திகார் அஹமத் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா அகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், அக்‌ஷர் பட்டேல் 2 ரன்னிலும் விக்கெட்டை இழந்தததன் மூலம் இந்திய அணி 31 ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின் கூட்டணி சேர்ந்த விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஜோடி போட்டியின் தன்மையை உணர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவேளையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் அடித்த விராட் கோலி தேவைக்கு ஏற்ப ரன்னும் குவித்தார். விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கடைசி இரண்டு ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

19ஆவது ஓவரின் இரண்டு பந்துகளை ஹர்திக் பாண்டியா வீணடித்தாலும், 19ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் விராட் கோலி சிக்ஸர் அடித்து போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதன் மூலம் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு இந்திய அணி வந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களில், விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் வந்த தினேஷ் கார்த்திக்கும் தடுமாறினாலும், விராட் கோலியின் நம்பிக்கையான ஆட்டத்தின் மூலம் கடைசி பந்தில் இலக்கை எட்டிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தனியாக போராடிய விராட் கோலி 82 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம், தோல்விக்கான காரணம் குறித்து வேதனையுடன் பேசியுள்ளார்.

இது குறித்து பாபர் அசாம் பேசுகையில், “எங்கள் பந்துவீச்சாளர்களை குறை சொல்லவே முடியாது. அவர்கள் தங்களது வேலையை சிறப்பாகவே செய்தனர். புதிய பந்தில் பந்துவீசுவதும், பேட்டிங் செய்வதும் கடினமானது. முதல் 10 ஓவருக்கு பிறகு எங்களுக்கு ஒரு நல்ல பார்டன்ர்சிப் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. 

முடிந்தவரை எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முயற்சித்தோம். ஆனால் விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர். குறிப்பாக விராட் கோலி விளையாடிய விதத்தை பாராட்டியே ஆக வேண்டும். மிடில் ஓவர்களில் எங்களுக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. 

இதன் காரணமாகவே சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைத்தோம், ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், இஃப்திகார் அஹமத், சான் மசூத் ஆகியோர் விளையாடிய விதம் எங்களது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை