கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!

Updated: Mon, Jan 30 2023 11:32 IST
Was a challenging wicket, adapting to situation was important: Suryakumar Yadav (Image Source: Google)

இந்திய - நியூசிலாந்து அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு த்ரில் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்களை மட்டுமே அடித்தது. மிகவும் குறைவான இலக்கை நோக்கி களமிறங்கினாலும் 19.5 ஓவர்களில் தான் இந்திய அணி வெற்றி கண்டது.

முதல் போட்டியில் ஓரளவிற்கு அதிரடியாக இருந்த சூழலில் 2ஆவது போட்டியில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிக கடினமான பிட்ச்சாக இருந்தது. அதிக ஸ்பின் இருந்ததால் பேட்ஸ்மேனால் பந்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக 2ஆவது இன்னிங்ஸில் படு மோசமாக இருந்தது. சுப்மன் கில் 11, இஷான் கிஷான் 19, ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, தடுமாறிய போது தான் துணைக்கேப்டன் சூர்யகுமார் - கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜோடி காப்பாற்றினர். எப்போதுமே அதிரடியாக ஆடும் சூர்யகுமார் யாதவ் மிகவும் நிதானமாக விளையாடினார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என வந்த போதும், அவர் நிதானமாக 5வது பந்தில் தூக்கி அடித்து வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து  பேசிய சூர்யகுமார் யாதவ், “புதுவிதமான சூர்யகுமாரை இன்று பார்த்திருப்பீர்கள். சூழலுக்கு ஏற்றார் போல நடப்பது முக்கியமாகும். வாஷிங்டனின் விக்கெட் வீழ்ந்ததும், கடைசி வரை அங்கு களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சவாலான விக்கெட். கடைசி ஓவரில் ஒரே ஒரு அதிரடி ஷாட் தேவைப்பட்டது. அப்போது பதற்றத்தை அடக்குவது கடினமாகும்.

5ஆவது பந்தின் போது ஹர்திக் பாண்ட்யா என்னிடம் நேராக வந்த இந்த பந்தில் நீ ஆட்டத்தை முடிக்க வேண்டும் எனக்கூறினார். அவரின் அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அதன் விளைவாகவே தைரியமாக தூக்கி அடித்து வெற்றி பெற்றோம். 2ஆவது இன்னிங்ஸில் பிட்ச்- இப்படி மாறும் என எதிர்பார்க்கவே இல்லை. எனினும் அதற்கேற்றார் போல ஆடிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை