டி20 கிரிக்கெட்டில் சோபிக்க இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - வாசிம் அக்ரம்!

Updated: Mon, Dec 20 2021 21:24 IST
Wasim Akram On India's Disastrous T20 World Cup (Image Source: Google)

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் அடைந்த படுதோல்விகளால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆடிய விதம், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை போன்றில்லை. பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் படுமோசமாக சொதப்பியது. ஷாஹீன் அஃப்ரிடியின் முதல் 2 ஓவர்களிலேயே இந்திய அணியின் மொத்த நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. 

அமீரகத்தில் இந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய நிலையில், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி களம்காண்கிறது.

இந்நிலையில், இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடுவதற்கு வாசிம் அக்ரம் ஆலோசனை வழங்கியுள்ளார். 
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி வீரர்கள் ஐபிஎல்லை தவிர வேறு லீக் தொடர்களில் ஆடுவதில்லை. வெளிநாட்டு லீக் தொடர்களிலும் ஆடினால், பல்வேறு நாட்டு பவுலர்களை, வெவ்வேறு கண்டிஷன்கள் மற்றும் பிட்ச்களில் எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 

அது பெரியளவில் இந்திய அணிக்கு உதவும். பொருளாதார அளவிலும், திறமையின் அடிப்படையிலும் ஐபிஎல் தான் நம்பர் 1 லீக் தொடர் என்றாலும், உலகளவில் நடத்தப்படும் லீக் தொடர்களில் ஒன்றிரண்டில் ஆடுவது இந்திய அணிக்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிப்பதில்லை. இந்நிலையில் தான், வாசிம் அக்ரம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை