ரஞ்சி கோப்பை 2022/23: இரட்டை சதம் விளாசிய ரஹானே; ரசிகர்கள் கொண்டாட்டம்!
மும்பை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் மும்பை அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது.
இதில் ரஹானே 139 ரன்களுடனும், சர்ஃபராஸ் கான் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் இன்றும் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதமடித்துள்ளார் ரஹானே. 261 பந்துகளில் 3 சிக்ஸர், 26 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தி்ல் ஜெயிஸ்வால் 162, சூர்யகுமார் யாதவ் 90, சர்ஃபராஸ் கான் 126 ரன்கள் எடுத்தார்கள்.
மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 127.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 651 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரஹானே, ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்ட புஜாரா தற்போது நன்கு விளையாடி வருகிறார். அதேபோல தனது திறமையை நிரூபிக்க ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.