சமகால கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பின் இந்தியாவின் ரன் மெஷினாக உருவாகியுள்ள கேஎல் ராகுல் கடந்த 2019 உலக கோப்பைக்கு பின்பு இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் முக்கிய பேட்ஸ்மேனாக நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தடுமாறும் இந்த காலங்களில் அபாரமாக செயல்பட்டு வரும் இவர் ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு சீசனிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வருகிறார். 

Advertisement

அதனாலேயே 2022 சீசனில் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ அணிக்கு 17 கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் விளையாடிய அவர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக தொகைக்கு விளையாடிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். அதேபோல் 2020 முதல் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் அவர் இளம் வீரராக இருப்பதால் 34 வயதை கடந்துள்ள ரோஹித் சர்மாவுக்கு பின் அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்குவதற்கான வாய்ப்புகளை பிசிசிஐ வழங்கி வருகிறது.

Advertisement

அதன்படி இந்த வருடம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர் துவங்க ஒருநாள் முன்பாக துரதிர்ஷ்டவசமாக வலை பயிற்சியின்போது காயமடைந்து மொத்தமாக வெளியேறினார். அதன் காரணமாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 5ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்காதது இந்தியாவின் தோல்விக்கும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த நிலைமையில் காயத்திலிருந்து குணமடைவதற்காக ஜெர்மனிக்கு சென்ற அவர் உயர்தர அறுவை சிகிச்சையை மேற்கொண்டு சில வாரங்கள் ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது காயத்திலிருந்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ள அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைவதற்காக காயமடைந்த வீரர்கள் வழக்கமாக செல்லும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் முகாமிட்டுள்ளார். தனது சொந்த ஊரான அங்கு லேசான செயல்பாடுகளை தொடங்கியுள்ள அவர் முதற்கட்ட பயிற்சிகளை துவங்கியுள்ளார்.

வரும் ஜூலை 29இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் காயத்தைப் பொறுத்து சேர்க்கப்படுவார்கள் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து அந்த தொடரில் பங்கேற்பதற்கான வேலையை முழு வீச்சில் துவங்கியுள்ள அவர் மும்முரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

ஆனால் அவர் எதிர்கொள்ளும் பந்துவீச்சாளர் தான் ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது. ஆம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ராகுலுக்கு இந்தியாவின்  மூத்த அனுபவ ஜாம்பவான் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி பந்து வீசி வருகிறார். பொதுவாக இதுபோன்ற அகடமியில் இளம் பந்துவீச்சாளர்கள் தான் இதுபோன்ற நட்சத்திரங்களுக்கு பந்து வீசுவார்கள். ஆனால் ராகுல் போன்ற தரமான வீரர் குணமடைவதற்காக தேசிய அகடமியில் இருக்கும் ஜூலன் கோஸ்வாமி அவரின் கோரிக்கைக்கு இணங்க பந்து வீசி நல்ல ஃபார்முக்கு திரும்ப உதவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாக உலக சாதனை படைத்துள்ள ஜூலன் கோஸ்வாமி இந்தியாவின் நிறைய சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ஜாம்பவான் வீராங்கனையாக போற்றப்படுகிறார். அந்த அளவுக்கு தரமான அவர் 4 வருடங்களுக்கு முன்பே ஓய்வு பெற்றதால் ஜூலை 29இல் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய மகளிர் அணியில் இடம் பெறவில்லை.

 

அந்த நிலைமையில் அகடமியில் இருக்கும்போது ராகுலுக்கு உதவலாம் என்ற வகையில் வலைப்பயிற்சியில் அவர் பந்து வீசுவது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அந்த 2 நட்சத்திரங்களும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News