முதலிரண்டு பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய ராகுல் சஹார்; வைரல் காணொளி!

Updated: Sun, May 05 2024 16:46 IST
முதலிரண்டு பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய ராகுல் சஹார்; வைரல் காணொளி! (Image Source: Google)

பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற ரஹானே 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கெய்க்வாட்டுடன் இணைந்த டேரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. 

அதன்பின் இன்னிங்ஸின் 7ஆவது ஓவரை பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சஹார் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் கட் அடிக்கும் முயற்சியில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியளித்தார். இதனால் கடைசி இரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்த ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஷிவம் தூபேவும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கட் அடிக்கும் முயற்சியில் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து, முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். முன்னதாக கடந்த போட்டியிலும் ஷிவம் தூபே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது முதல் ஓவரின் முதலிரண்டு பந்துகளில் நட்சத்திர வீரர்களை வெளியேற்றிய ராகுல் சஹாரின் காணொளி தற்சமயம் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை