ஐபிஎல் 2022: ‘தோனி இருக்க கவலை எதற்கு’- ரவீந்திர ஜடேஜா!

Updated: Thu, Mar 24 2022 19:31 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். 

இதையடுத்து புதிய கேப்டனுடன் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3ஆஅவது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 

ஐபிஎல் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதவுள்ளன.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனான பிறகு பேட்டியளித்த ஜடேஜா, “சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆனதற்கு மகிழ்ச்சியடைகிறேன். அதேசமயம் தோனியினால் அணிக்குக் கிடைத்த பெருமைகளைச் சரியான முறையில் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற பொறுப்பும் ஏற்பட்டுள்ளது.

 

நான் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. தோனி அணியில் தான் உள்ளார். ஏதாவது சந்தேகம் இருந்தால் நிச்சயமாக அவரிடம் தான் ஆலோசனைகள் கேட்பேன். அவர் உடன் இருப்பதால் எனக்குக் கவலை எதுவுமில்லை. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளியுங்கள்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை