இப்போது எல்லாவற்றையும் சரியாக செய்துவருகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Mon, May 13 2024 13:40 IST
இப்போது எல்லாவற்றையும் சரியாக செய்துவருகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ளா சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ராஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 52 ரன்களையும், வில் ஜேக்ஸ் 41 ரன்களையும் சேர்த்தனர்.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 21, ஷாய் ஹோப் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய கேப்டன் அக்ஸர் படேலும் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இப்போட்டியில் பேட்டிங்கில் 32 ரன்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய கேமரூன் க்ரீன் ஆட்டநாயகன் விருதை வென்றனார்.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸிஸ்,  “இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் போட்டியிலும் வெற்றிபெற்றதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் மிகவும் புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று நினைக்கிறேன். இத்தொடரின் தொடக்கத்தில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. 

ஆனால் தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டையும் ஒன்று சேர்க்க முடிகிறது. சில நேரங்களில் மக்கள் போட்டியை பற்றி நிறைய விஷயங்கள் பேசுகிறார்கள். இதை தாண்டி எங்களுக்கு ஒரு இடது கை சுழற்பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார். ஸ்வப்னில் சிங் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்திருக்கிறார். எங்களுக்கு திரைக்கு பின்னால் வெளியில் நிறைய வேலைகள் நடந்திருக்கின்றன. நாங்கள் இப்போது எல்லாவற்றையும் சரியாக செய்துவருகிறோம்.

எங்களுக்கு பந்து வீச்சில் நிறைய தேர்வுகள் கிடைத்துள்ளன. கடந்த சில போட்டிகளில் யாஷ் தயாள் மற்றும் லோக்கி ஃபெர்குசன் இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் வெற்றிக்கு உதவிவருகிறார்கள். நாங்கள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு பாணியில் விளையாட விரும்புகிறோம். தைரியமாக இருக்க வேண்டும், சிலவற்றை தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை