நாங்கள் ஒன்று சேர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை - ஷாகிப் அல் ஹசன்!

Updated: Tue, Oct 31 2023 22:33 IST
நாங்கள் ஒன்று சேர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை - ஷாகிப் அல் ஹசன்! (Image Source: Google)

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து முதல் அணியாக வெளியேறியிருக்கிறது. வங்கதேச அணி கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறது. மேலும் அந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அங்கு கிரிக்கெட் உள்கட்டமைப்புகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

இப்படி எல்லாம் இருந்தும் கூட வங்கதேச அணி அதற்குரிய தரத்தில் போட்டியை வெளிப்படுத்தாமல், ஏழு போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. கிரிக்கெட் உலகில் வங்கதேச அணியை அவர்களது ரசிகர்கள் ஆதரிப்பது போல வேறு எந்த நாட்டிலும் ஆதரிக்க மாட்டார்கள். 

எவ்வளவு தோல்வி வந்தாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களது அணியை விட்டுக் கொடுக்காமல் மைதானத்திலேயே ஆதரிப்பார்கள். இன்று ஏழாவது போட்டியில் விளையாடிய வங்கதேச அணி கொஞ்சம் கூட போட்டியை வெளிப்படுத்தாமல் பாகிஸ்தான் அணியிடம் சரணடைந்து தோற்றது. மேலும் கேப்டன் ஷாகிப் அல்ல ஹசன் பேட்டிங் மிகவும் மோசமாக இந்த தொடர் முழுக்க அமைந்திருக்கிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஷாகிப் அல் ஹசன், “மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தும் நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து பெரிய ரன்கள் எடுக்கவில்லை. சில பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அதை பெரியதாக மாற்றவில்லை. அந்த வகையில் எங்களை பேட்டிங்கில் ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினோம். அதற்கு பாகிஸ்தானுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அவர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களுடைய டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.

என்னுடைய தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் நானும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. இருப்பினும் இப்போட்டியில் அதிர்ஷ்டத்துடன் சில ரன்கள் அடுத்ததால் தற்போது நன்றாக உணர்கிறேன். நாங்கள் ஒன்று சேர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. அடுத்த 2 போட்டிகளில் அதை செய்து கம்பேக் கொடுப்போம். இத்தொடரில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுடைய ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். அவர்களுடைய முகத்தில் நாங்கள் புன்னகையை கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை