அடுத்தடுத்து ரன் அவுட்டானது கண்டிப்பாக அணிக்கு நல்லது கிடையாது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!

Updated: Fri, Nov 03 2023 22:12 IST
அடுத்தடுத்து ரன் அவுட்டானது கண்டிப்பாக அணிக்கு நல்லது கிடையாது - ஸ்காட் எட்வர்ட்ஸ்! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ நகரில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.3 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக எங்கல்பேர்ச்ட் 58, மேக்ஸ் ஓ’தாவுத் 42 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 நூர் அகமது 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 180 ரன்கள் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு கேப்டன் ஷாகிதி 56*, ரஹமத் ஷா 52 ரன்கள் எடுத்து 31.3 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

முன்னதாக இப்போட்டியில் மேக்ஸ் ஓ’தாவுத், கோலின் ஆக்கர்மேன், எங்கல்பேர்ச்ட், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் என டாப் 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் தேவையின்றி ரன் அவுட்டானது நெதர்லாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் டாஸ் வென்று 280 ரன்களை அடிக்க நினைத்த தங்களது அணியில் டாப் 5 பேரில் தாம் உட்பட 4 பேர் ரன் அவுட்டானது தோல்வியை கொடுத்ததாக ஸ்காட் எட்வர்ட்ஸ் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  “டாப் 5 பேட்ஸ்மேன்களின் 4 பேர் ரன் அவுட்டானது கண்டிப்பாக எங்களுடைய அணிக்கு நல்ல தொடக்கம் கிடையாது. இந்த போட்டியில் நாங்கள் நல்ல தொடக்கத்தைப் பெற்றும் அதன் பின் அனைத்தையும் இழந்தோம். ஆஃப்கானிஸ்தான் அணியிடம் தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிலிருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை.

மேலும் பனியின் தாக்கம் இருந்தது என்று நீங்கள் அதிகம் சொல்லக்கூடாது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல முடிவை எடுத்தோம். ஆனாலும் பனி இருக்கும் இந்த சூழ்நிலையில் 280 ரன்கள் எடுத்திருந்தால் நல்ல இலக்காக இருந்திருக்கும். இதிலிருந்து உடனடியாக மறுசீரமைத்து இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் நாங்கள் தயாராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை