இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் வங்கதேசத்தை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் அழகான தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 364/9 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மாலன் சதமடித்து 140, ஜானி பேர்ஸ்டோ 52, ஜோ ரூட் 82 ரன்கள் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை குவித்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Advertisement

அதை தொடர்ந்து 365 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு துவக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக 76 ரன்கள் எடுத்த போதிலும் தன்ஸித் ஹசன் 1, நஜூமுள் சாண்டோ 0, கேப்டன் சாகிப் 1, மெஹதி ஹசன் 8 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் முஸ்பிக்கூர் ரஹீம் 51, தவ்ஹித் ஹிரிடாய் 39 ரன்கள் எடுத்தும் 48.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டான வங்கதேசம் தங்களின் முதல் தோல்வியை சந்தித்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 4 விக்கெட்டுகளையும் கிறிஸ் ஓக்ஸ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்நிலையில் இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றும் 400 ரன்கள் அடிக்காமல் தவற விட்டது ஏமாற்றத்தை கொடுப்பதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரிய போட்டிகளில் இந்த ஸ்கோர் போதாது என்று தெரிவிக்கும் அவர் இந்தியாவில் பல்வேறு மைதானங்களில் இருக்கும் சூழ்நிலைகளை கணிப்பது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜோஸ் பட்லர், “முதல் போட்டியில் சந்தித்த மோசமான தோல்விக்கு பின் இது உண்மையாக நல்ல செயல்பாடாகும். இருப்பினும் கடைசி நேரத்தில் நாங்கள் இன்னும் சற்று பார்ட்னர்ஷிப் போட்டு அதிக ரன்களை அடித்திருக்க வேண்டும். அதே சமயம் முதல் போட்டியில் சந்தித்த பின்னடைவுக்கு பின் இப்போட்டியில் டேவிட் மாலன் பெரிய சதமடித்ததை பார்த்தது சிறப்பாக இருந்தது.

ஆனாலும் நீங்கள் எப்போதுமே கச்சிதமான செயல்பாடுகளை எதிர்பார்க்கிறோம். மேலும் இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளை சரியாக படிப்பதே பெரிய சவாலாக இருக்கிறது. இருப்பினும் எங்களிடம் வேகம், சுழல் என அனைத்திற்கும் தகுந்த சமநிலை நிறைந்த அணி இருக்கிறது. இன்று ரீஸ் டாப்லி எங்களுக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்” என்று கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News