இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

முன்னதாக இந்த தொடருக்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வந்த மூத்த வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அவர்களுடன் மூத்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. ஏற்கனவே 35 வயதை கடந்துவிட்ட இவர்கள் சமீப காலங்களாக சிறப்பாக செயல்பட தவறியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தரமான இந்திய அணியை உருவாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்வு குழு அறிவித்துள்ளது.

Advertisement

இதில் 37 வயதை கடந்துள்ள அனுபவம் மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஏனெனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் இலங்கை தொடர் மட்டுமல்லாது இனி இந்திய அணியில் எப்போதுமே வாய்ப்பு இல்லை என தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா தம்மிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் சஹா கூறினார். இருப்பினும் நான் பிசிசிஐயில் இருக்கும்வரை இந்திய அணியில் உனக்கு இடம் இருக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்த போதிலும் அதே காரணத்துக்காக அணியில் இடம்பிடித்து இருக்கும்போதே கௌரவத்துடன் ஓய்வு பெறுவது பற்றி சிந்திக்குமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாகவும் அவர் வேதனையில் புலம்பினார்.

இப்படி கடந்த 2 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கித் தவித்து வரும் அவர் இப்படி புலம்புவதில் எந்த பயனும் இல்லை என மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது பற்றி ஐசிசி அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சஹாவுக்கு பாராட்டுக்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக நீண்டகாலம் பணியாற்றிய பலரில் அவரும் ஒருவர் என நினைக்கிறேன். இப்போதும்கூட அவர் உலகில் ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என நான் மதிப்பிடுவேன். அவரின் கைகள் மிக வேகமாக செயல்படுவதால் அவர் ஒரு அபாரமான விக்கெட் கீப்பர். அதே போல் பேட்டிங்கிலும் ஒரு சில சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியா தடுமாறிய வேளைகளில் பல முக்கிய இன்னிங்ஸ் ஆடியுள்ளார். இருப்பினும் நாங்கள் விளையாடிய போது எம்எஸ் தோனி வந்ததைப் போல இப்போது ரிசப் பண்ட் வந்து விட்டார். கடந்த சில வருடங்களாக அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

இது போன்ற நேரங்களில் ஒரு 2ஆவது தர விக்கெட் கீப்பராக இந்திய அணியில் பயணம் செய்து ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடுபவராக அவர் இருந்தார். ஆனால் புதிதாக வந்த ரிஷப் பண்ட் அபாரமாக செயல்பட்டு தனக்கென ஒரு முத்திரை பதித்து நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார். எனவே 2வது தர விக்கெட் கீப்பர் கூட ஒரு இளம் வீரராக இருக்க வேண்டும் என அணி நிர்வாகம் நினைப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை.

Advertisement

ஒரு சில நேரங்களில் நீண்ட வெளிநாட்டு கிரிக்கெட் தொடர் மட்டுமல்லாது சொந்த மண்ணில் நடைபெறும் தொடரின் போது கூட நல்ல இளம் 2வது விக்கெட் கீப்பர் தேவைப்படுகிறது. எனவே சகா போன்ற ஒருவரை தாண்டி இளம் விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News