WI vs IND 1st T20I: விண்டீஸை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Updated: Thu, Aug 03 2023 21:48 IST
WI vs IND 1st T20I: விண்டீஸை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. 

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதேசமயம் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக திலக் வர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

இதையடுத்து விண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி 28 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங்கும் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேப்டன் ரோவ்மன் பாவேல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஹெட்மையரும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து கேப்டன் ரோவ்மன் பாவெலும் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி  6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை