இதுபோன்ற போட்டிகளில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் - பாட் கம்மின்ஸ்!

Updated: Tue, Apr 16 2024 13:08 IST
இதுபோன்ற போட்டிகளில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களுக்கு ராஜவிருந்து என்றே தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவுசெய்தது. 

அதன்படி இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், அபிஷேக் சர்மா 34 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 32 ரன்களையும் என களமிறங்கிய அனைத்து வீரர்களும் சுமார் 150 ஸ்டிரைக் ரேட்டிற்கு மேல் விளாசி தள்ளினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் விராட் கோலி 42 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 62 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இறுதிவரை போராடி 5 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காத காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இதுபோன்ற போட்டிகளில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன். இது கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டம். இன்று நடைபெற்ற போட்டியில் சில அற்புதமான காட்சிகள் இருந்த. இதில் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை உங்களால் வெளிக்காட்ட முடியும். இதுபோன்ற போன்ற போட்டிகளில் ஒரு ஓவருக்கு 7 அல்லது 8 ரன்களை விட்டுக் கொடுத்தால் கூட மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் கொடுக்க முடியும்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நான் இந்த போட்டியில் பிட்சை கண்டறியும் முயற்சியை பாதியோடு கைவிட்டுவிட்டேன். சின்னச்சாமி மைதானம் மிகவும் வறண்டது போல் மாறிவிட்டது. இந்த சீசனில் நாங்கள் பெறும் நான்காவது வெற்றி இது என்பதால் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டியில் அனைத்து பேட்டர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளதால் அவர்களது முகத்தில் புன்னகையுடன் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை