மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குருப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த வங்கதேச மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தய்லாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை பூச்சாதம் ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பூச்சாதம் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன் காரணமாக தாய்லாந்து மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிரப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரபெயா கான் 4 விக்கெட்டுகளையும், சபிகுன் நஹார், ரிது மோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் - முர்ஷிதா கதும் இணை அதிரடியான தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற திலாரா அக்தர் 17 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய இஷ்மா தஞ்சிம் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அனாலும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முர்ஷிதா கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்த நிலையில் முர்ஷிதா கதும் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் அதன்பின் களமிறங்கிய ரிது மோனி - ருமானா அஹ்மெத் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் வங்கதேச மகளிர் அணியானது 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்ரிபெற்றது.