மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய வீராங்கனைகள் அபாரம்; தெ.ஆ,வுக்கு 275 ரன்கள் டார்கெட்!

Updated: Sun, Mar 27 2022 10:21 IST
Women's CWC 2022: India finishes off 274/7 on their 50 overs (Image Source: Google)

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடிவருகின்றன.

மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதனால் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்களைச் சேர்த்து அசத்தியது. தொடர்ந்த அபாரமாக விளையாடிய இந்த ஜோடி அரைசதம் கடந்து அசத்தினர்.

அதன்பின் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா ஆட்டமிழக்க, அடுத்து வந்த யஷ்திகா பாட்டியா 3 ரன்களோடு வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 64ஆவது அரைசதத்தைக் கடந்து பிரமிக்கவைத்தார்.

பின் 71 ரன்களில் ஸ்மிருதி மந்தனாவும், 68 ரன்களில் மிதாலி ராஜும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடியதுடன் 48 ரன்களையும் சேர்த்தார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சப்நைம் இஸ்மைல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை