கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான அலீசா ஹீலியும், ஹெய்னசும் விளையாடி அணிக்கு நல்ல் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் ரேச்சல் ஹெய்ன்ஸ் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பெத் மூனி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தூணாக நின்று பொறுப்புடன் விளையாடிய அலீசா ஹீலி சதமடித்ததுடன்,138 பந்தில் 26 பவுண்டரி உள்பட 170 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆன்யா சர்ப்சோல் 3 விக்கெட்டுகளையும், சோஃபி எக்லஸ்டோன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.