மகளிர் ஆசிய கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 148 ரன்களில் கட்டுப்படுத்தியது நியூசிலாந்து!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 41 ரன்களை எட்டியது.
அதன்பின் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்த நிலையில் அலீசா ஹீலி தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் பெத் மூனியுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி 40 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 30 ரன்களை எடுத்த நிலையில் எல்லிஸ் பெர்ரியும் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 18 ரன்களையும், கிரேஸ் ஹாரி, ஆஷ்லெ கார்ட்னர், ஜார்ஜியா வர்ஹாம் உள்ளிட்ட வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கும் என நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.