மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றை உறுதிசெய்த தென் ஆப்பிரிக்கா!

Updated: Sat, Oct 12 2024 22:31 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் மற்றும் சதி ராணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் திலாரா அக்தர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் சதி ராணியும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த சோபனா மோஸ்டாரி - கேப்டன் நிகர் சுல்தானா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோபனா மோஸ்டாரி 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகர் சுல்தானா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும் 103 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மரிஸான் கேப், அன்னேரி டெர்க்சன், மலபா ஆகியோர் தல ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் லாரா வோல்வார்ட் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரிட்ஸுடன் இணைந்த அன்னேக் போஷ்க்கும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் 25 ரன்களை எடுத்திருந்த நிலையில் அன்னேக் போஷ்க் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் மரிஸான் கேப் 13 ரன்களையும், சோலே ட்ரையான் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஏறத்தாழ அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை