ஸ்தம்பித்து நின்ற ஸ்டோக்ஸ்; ஸ்டம்ப்ஸை தகர்த்த முகமது ஷமி - வைரல் காணொளி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29ஆவது போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும், கே.எல் ராகுல் 39 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 229 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் மற்றும் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் மொத்த நம்பிக்கையையும் பும்ரா வெறும் 2 பந்துகளில் மொத்தமாக கலைத்தார். போட்டியின் 5ஆவது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரின் 5ஆவது பந்தில் டேவிட் மாலனையும், 6ஆவது பந்தில் ஜோ ரூட்டையும் வெளியேற்றி அசத்தினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய முகமது ஷமி இந்த போட்டியிலும் பந்துவீச்சில் மிரட்டினார் பென் ஸ்டோக்ஸ் (0), பேர்ஸ்டோவ் (14) ஆகியோரை தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் போல்டாக்கிய முகமது ஷமி, மொயின் அலி மற்றும் ஆதில் ரஷித் ஆகியோரின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.அதே போல் குல்தீப் யாதவ் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றியதன் மூலம் 34.5 ஓவரில் வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 6வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, இதன் மூலம் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.