WPL 2023: ருத்ரதாண்டவமாடிய சோபி டிவைன்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது ஆர்சிபி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை டன்க்லி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் லாரா 68 ரன்கள் அடித்தார். சபினேனி மேகனா 31 ரன்கள் அடித்தார். ஆஷ்லே கார்ட்னெர் 26 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ஹேமலதா 6 பந்தில் 16 ரன்களும், ஹர்லீன் தியோல் 5 பந்தில் 12 ரன்களும் அடிக்க, 188 ரன்களை குவித்து 189 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோபி டிவைன் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இவர்களது அதிரடியால் முதல் 6 ஓவர்களிலேயே ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களைக் குவித்தது.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சோபி டிவைன் 20 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தனர். அதேசமயம் மறுமுனையில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசி 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னர் இணைந்த எல்லிஸ் பெர்ரி, ஹீதர் நைட் இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் ஆர்சிபி அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் ருத்ரதாண்டவமாடிய சோபி டிவைன் ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.