WPL 2024: பெத் மூனி, லாரா வோல்வார்ட் அபார ஆட்டம்; ஆர்சிபி அணிக்கு இமாலய இலக்கு!

Updated: Wed, Mar 06 2024 21:07 IST
WPL 2024: பெத் மூனி, லாரா வோல்வார்ட் அபார ஆட்டம்; ஆர்சிபி அணிக்கு இமாலய இலக்கு! (Image Source: Google)

ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி லாரா வோல்வார்ட் - பெத் மூனியின் அபார ஆட்டத்தின் மூலம் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

ஏற்கெனவே குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதால், இப்போட்டியிலாவது முதல் வெற்றியைப் பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

அதிலும் குறிப்பாக டபிள்யூபிஎல் லீக் தொடரில் குஜராத் அணிக்கு இப்படி ஒரு தொடக்க பார்ட்னர்ஷிப் கிடைத்ததில்லை எனும் அளவிற்கு இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மேலும் இருவரும் பந்தை தூக்கி அடிப்பதற்கு பதிலாக, பந்திற்கு ஏற்றவாறு தங்கள் ஷாட்டுகளை விளாட இந்த இருவரது பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்துடன் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். அதன்பின் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 45 பந்துகளில் 13 பவுண்டரிகளை அடித்து 76 ரன்கள் எடுத்த நிலையில் நூலிழையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

ஆனாலும் மறுபக்கம் தனது அதிரடியான ஆட்டத்தை கைவிடாத கேப்டன் பெத் மூனி ஒருபக்கம் ஸ்கோரை உயர்த்தி வர, மறுமுனையில் களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, அடுத்த பந்திலேயே ஆஷ்லே கார்ட்னர் மற்றும் ஹேமலதா ஆகியோர் தூக்கி அடிக்க முயற்சித்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி  12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 85 ரன்களைக் குவித்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்து. ஆர்சிபி அணி தரப்பில் ஜார்ஜியா வேர்ஹாம், சோஃபி மோலினக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை