WPL 2024: எல்லிஸ் பெர்ரி பொறுப்பான ஆட்டம்; மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பீர்மியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கடந்த போட்டியில் காட்டிய அதே அதிரடி பாணியில் இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்மிருதி மந்தனா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சோஃபி டிவைனும் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய மேகனா 11 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 7 ரன்களுக்கும், சோஃபி மோலினக்ஸ் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் எல்லிஸ் பெர்ரியுடன் இணைந்த ஜார்ஜியா வேர்ஹாமும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 27 ரன்கள் எடுத்திருந்த ஜார்ஜியா வேர்ஹாம் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த எல்லிஸ் பெர்ரி 44 ரன்களையும், ஷ்ரேயங்கா பாட்டில் 7 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது.