டாப் ஆர்டரில் நாங்கள் ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் - ஆஷ்லே கார்ட்னர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 ரன்களையும், காஷ்வி கௌதம் 20 ரன்களையும் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸகைவர், அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் யஷ்திகா பாட்டியா 8, ஹீலி மேத்யூஸ் 17, ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதில் அவர் 57 ரன்களைச் சேர்க்க அவருக்கு துணையாக விளையாடிய அமெலியா கெர் 19 ரன்களையும், சஜீவன் சஞ்சனா 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், “இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். மேலும் டாப் ஆர்டர் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று எண்ணினோம், ஆனால் அது நடக்கவில்லை. கடந்த இரண்டு போட்டிகளை காட்டிலும் மைதானத்தின் தன்மை இந்த போட்டியில் வித்தியாசமாக இருந்தது. அதற்கேற்ப நாங்கள் விளையாடவில்லை என்று நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் முதல் பத்து ஓவர்களில் பந்து கொஞ்சம் வேகமாக இருந்தது போல் தோன்றியது. சுழற்பந்து வீச்சாளர்கள் வந்து மெதுவாக பந்து வீசியபோது கொஞ்சம் திருப்பம் ஏற்பட்டது. அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள், நாங்கள் வேகமாக பந்து வீசவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு எங்களுக்கு ஒரு நல்ல, சிறிய இடைவெளி உள்ளது. அதனால் எங்கள் தவறுகளை திருத்தில் அதிலிருந்து மீள்வதற்கான நேரம் எங்களுக்கு இருகிறது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.