WPL 2025: ஆர்சிபி அணியை 125 ரன்னில் சுருட்டியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் ஹாட்ஜ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேனியல் வையட் 4 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் ஆர்சிபி அணி 25 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ராக்வி பிஸ்ட் மற்றும் கனிகா அஹுஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தா நிலையில் ராக்வி பிஸ்ட் 22 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த கனிகா அஹுஜா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் கிம் கார்த் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வேர்ஹாம் 20 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் டியான்டிரா டோட்டி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.