WPL 2025: பேட்டர்கள் அதிரடி; மும்பை இந்தியன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ம்ற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சபினேனி மேக்னா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சபினேனி மேக்னா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மந்தனாவுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களை எடுத்திருந்த ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழந்தார். பின்னர் எல்லிஸ் பெர்ரியுடன் இணைந்த ரிச்சா கோஷும் அதிரடியை தொடர அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சா கோஷ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களையும், ஜார்ஜிய வேர்ஹாம் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், அமெலியா கெர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.