WPL 2024: டிசம்பர் 9இல் வீராங்கனைகள் ஏலம்!

Updated: Thu, Nov 09 2023 15:43 IST
Image Source: Google

இந்தியாவில் நடத்தப்படும் ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரைப் போலவே, மகளிருக்காக மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரை இந்தாண்டு பிசிசிஐ நடத்தியது. இதில் மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 5 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற்றன.

அதன்படி வீராங்கனைகளுக்கான முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி வழங்கப்பட்டது. கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை முதல் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது. இந்நிலையில் வரும் 2024ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு வரும் டிசம்பர் 9ஆம் தேதி வீராங்கனைகள் ஏலம் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், 5 அணிகளிலும் 30 இடங்கள் போட்டிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான 9 இடங்களும் அடங்கும். கடந்த முறை ஏலத்தில் கிடைத்த தொகையில் செலவினங்கள் போக மீதம் உள்ள தொகையும், தங்களிடம் உள்ள வீராங்கனைகளை விடுவிப்பதால் கிடைக்கும் தொகையையும் தவிர, இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.5 கோடி அதிக வருவாய் கிடைக்கும்.

கடந்த அக்டோபர் மாதம் பிசிசிஐ  5 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி 60 வீராங்கனைகள் தக்க வைத்து கொள்ளப்பட்டுள்ளனர்; 29 பேர் வெளியேற்றப்பட உள்ளனர். ஒவ்வொரு அணியின் வீராங்கனைகளின் இறுதி பட்டியலும், ஏலம் நிறைவடைந்ததும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை