இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து 2ஆம் நாள்தான் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

Advertisement

இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டத்தின் 2வது செஷனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ஆம் நாள் ஆட்ட முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது. அந்த அணியில் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருபரும் களத்தில் இருந்தனர். 

அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த 4ஆம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்பட்டாம பாதிக்கப்பட்டது. இதனால் இப்போட்டி நிச்சயம் டிராவில் தான் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

அதன்பின் இன்று 5ஆம் நாள் ஆட்டமும் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக, 4 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா என அனைவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 

இதனால் வில்லியம்சன், டெய்லர் ஆகிய இருவருமே ரன் அடிக்க முடியாமல் திணறினர். இன்றைய நாளின் முதல் 14 ஓவரில் நியூசிலாந்து அணியால் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதன்பின் ரன் அடிக்க முயற்சித்த ராஸ் டெய்லர், முகமது ஷமியின் பந்தில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Advertisement

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹென்ரி நிகோல்ஸை இஷாந்த் சர்மா வீழ்த்த, வாட்லிங், கிராண்ட்ஹோம், ஜேமிசன் என அடுத்தடுத்து வந்த வீரர்களை முகமது ஷமி வெளியேற்றி அசத்தினார். 

இருப்பினும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேன் வில்லியம்சன் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் பந்துவீச்சில் கேப்டன் கோலியிடன் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார். இருப்பினும் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. 

இறுதியில் டிம் சௌதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். இதனால் ஜடேஜா வீசிய 100ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சௌதி, அடுத்த பந்திலேயே போல்டாகி பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இதனால் ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே நியூசிலாந்து அணி 249 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News