இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் இன்று ஆறாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இன்றைய நாளின் தொடக்கத்திலேயே இந்திய அணி கேப்டன் விராட் கோலி 13 ரன்னிலும், புஜாரா 15 ரன்னிலும், ரஹானே 15 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்குச் சென்றனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற 139 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.