கிரிக்கெட் விளையாட்டிற்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு. இதனை யாராலும் 100% சரியாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதுமை இருந்துகொண்டே இருக்கும்.

Advertisement

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் இசை, எழுத்து, இலக்கியம், விளையாட்டு என ஏதேனும் ஒரு அடையாளம் இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்த அடையாளம் வருவதற்கு மிக முக்கியக் காரணம் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement

அனைத்துத் துறைகளிலும் கண்டிப்பாக ஜாம்பவான்கள் இருக்கத்தான் செய்வார்கள், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை என்றும் சச்சினே மாபெரும் ஜாம்பவானாகத் திகழ்வார் என்றால் அதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது. அவர் விட்டுச்சென்ற இடத்தை விராட் கோலி நிரப்பிவிட்டார். இருந்தும் சச்சின் கொண்டாடப்படுவதற்கு காரணம், அவர் கொடுத்த உணர்வுகள்.

வாழ்க்கையில் துவண்டுபோனவர்களுக்கு சச்சின் என்றுமே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி. இவரது ஆட்டத்தையும் போராட்ட குணத்தையும் பார்த்து வாழ்க்கையில் பிடிமானம் வரவழைத்துக் கொண்டவர்கள் ஏராளம்.

கிரிக்கெட்டைப் பார்க்காதவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்கூட சச்சினைத் தெரியும். வளரும் நாடான இந்தியாவில் கிரிக்கெட் விளையாடாத இளைஞர்களே இல்லை.

ஒரு மனிதன் தனது கனவை அடைவதற்காக 22 ஆண்டுகள் தொடர்ந்து ஓடுவானா என்ற கேள்விக்கு தனது சிறப்பான செயல்பாடுகள், அர்ப்பணிப்புகள் மூலம் பதில் கொடுத்தவர்.

Advertisement

1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா அடைந்த தோல்விகளை அவ்வளவு எளிதாக எந்த மனிதராலும் கடந்துபோக முடியாது. ஆனால் இவையனைத்தையும் கடந்துவந்து 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

சச்சினின் ஒவ்வொரு இன்னிங்ஸுமே அவரது ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடிக்கும். ஆனால் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சச்சின் ஆடிய 241* இன்னிங்ஸை அவரது ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். கிரிக்கெட் வாழ்வில் சச்சின் பார்க்காத பந்துவீச்சாளர்களே கிடையாது.

அப்துல் காதிர் பந்தில் டவுன் தி ட்ராக் சிக்சர் அடித்ததில் தொடங்கி வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ஆலன் டொனால்ட், அக்தர், வார்னே, முரளிதரன், மெக்ராத், பிரட் லீ, பொல்லாக், ஆண்டர்சன், ஸ்டெயின், இம்ரான் கான், ஆம்ப்ரோஸ், ஷேன் பாண்ட், கில்லெஸ்பி, வால்ஷ், டேரன் காஃப், காஸ்ப்ரோவிச், வாஸ் என அடிக்காத பந்துவீச்சாளர்களே கிடையாது.

Advertisement

இந்தப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை அசால்ட்டாக டீல் செய்த சச்சினுக்கு, 2004 பார்டர் - கவாஸ்கர் தொடர் அவ்வளவு எளிதாக அமையவில்லை.

ஆனால் இந்தியாவின் கேப்டன் கங்குலி, டிராவிட், லக்‌ஷ்மண், சேவாக் என அனைவரும் அந்தத் தொடரில் சதம் அடித்துவிட்டார்கள். அதிலும் எதிரணியில் சச்சினின் போட்டியாளர் எனப் பார்க்கப்பட்ட பாண்டிங் இரட்டை சதத்தை இருமுறை அடித்திருந்தார். மூன்று போட்டிகள் முடிவடைந்தது. நான்காவது போட்டிக்கு முன்னதாக வழக்கம்போல் சச்சின் மீதான விமர்சனங்கள் அதிகமாகவே எழுந்தன.

அந்தத் தொடரில் ட்ரைவ் ஷாட்கள் ஆடும்போதெல்லாம் விக்கெட்டை விட்ட சச்சின், நான்காவது போட்டியில் ட்ரைவ் ஆடக்கூடாது என்னும் உறுதியோடு இருந்தார்.

Advertisement

அந்த ஆட்டத்தில் 10 மணி நேரம் களத்திலிருந்த சச்சின், எந்தவொரு பந்தையும் சாதாரணமாக எதிர்கொள்ளவில்லை. கில்லெஸ்பி, பிராக்கன், லீ, மெக்கில், ஸ்டீவ் வாஹ், கேடிச், மார்டின் என யார் பந்துவீசியும் சச்சினின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

ஆஃப் சைடில் பந்துவீசியே ஆஸ்திரேலியர்கள் சலித்துப்போனார்கள். இறுதியாக 436 பந்துகளை எதிர்கொண்ட சச்சின், 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பினார்.

அன்று கிரிக்கெட் ரசிகர்கள் உலகில் வேறு எந்த வீரராலும் செய்யப்படாத சாதனையைக் கண்டனர். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் களமிறங்கும்போது, தான் இந்த ஷாட் ஆட வேண்டும் என நினைப்பது கவர் ட்ரைவ்தான். ஆனால் 'ஆஃப் சைடில் வரும் பந்தை ஆடப்போவதில்லை' என்று முன்னமே தீர்மானித்து உலக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது வரலாற்றில் சச்சின் மட்டுமே.

Advertisement

இங்கே 'அதனால்தான் அவர் மாஸ்டர்' என்னும் பெயருக்கு இதுபோன்ற பல செயல்களைச் சொல்லலாம்.

உலகமே ''God of Cricket'' எனப் போற்றியபோது, "நான் கிரிக்கெட் கடவுள் கிடையாது. நான் தவறு செய்துகொண்டுதான் இருக்கிறேன். கடவுள் தவறு செய்பவர் அல்ல" எனக் கூறிய பண்புதான் சச்சின் மீது இன்னும் காதல் கொள்ளவைக்கிறது.

சச்சின் 99 ரன்களில் ஆடிக்கொண்டிருக்கிறார் என்றால், அவருக்கு ஒரு பதற்றமும் கிடையாது. ஆனால் ரசிகர்கள் ஒருவித பதற்றத்திலேயே இருப்பர். 90-களில் இருந்து 2000 வரையில் சச்சின் தனிநபராக கோடிக்கணக்கான ரசிகர்களின் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்தவர்.

Advertisement

தொடக்க காலத்தில் சச்சின் இங்கிலாந்தில் சதம் விளாசியபோது, சுனில் கவாஸ்கரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அது சச்சின் அடுத்த கவாஸ்கராக வருவாரா என்ற கேள்விதான். அதற்கு அவர் அளித்த பதில், ''சச்சின் நிச்சயம் அடுத்த கவாஸ்கராக வரப்போவதில்லை. அவர் முதல் சச்சினாக வலம் வரப்போகிறார். எனது கேள்வி எல்லாம், அவர் எப்படி தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப்போகிறார் என்பதுதான்'' எனத் தெரிவித்தார்.

அன்று கவாஸ்கர் கேட்ட கேள்விக்கு, 24 வருடங்கள் தொடர்ந்து பதிலளித்துவந்தார் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம்.

 

Advertisement

ஒரு மரம் விழுந்தால், அந்த மரத்தின் இடத்தை நிரப்ப, வேறு ஒரு செடியைத்தான் நட முடியும். ஆனால் ஆல மரத்திற்கு அப்படி அல்ல; அம்மரம்தான் வளரும்போதே விழுதுகளை விட்டு மிகப்பெரிய மரமாகிவிடும். நடுமரம் விழுந்தாலும் விழுதுகள் அதனைத் தாங்கி நிற்கும்.

தான் கற்ற கிரிக்கெட் பாடத்தை தோனி, கோலி என தனது விழுதுகளுக்கு அப்போதே கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றவர் சச்சின். இப்போது அவரின் அந்த விழுதுகள் இந்திய கிரிக்கெட்டைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரம் ரன்கள் என சச்சினின் அனைத்து சாதனைகளும் நிச்சயம் ஒருநாள் தகர்க்கப்படும். ஆனால் சச்சின் என்ற பெயர் கொடுக்கும் உணர்வு என்றும் தனித்துவமே! #HappyBirthdaySachin

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News