
ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பவுலிங்கில் அசத்திய ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் பட்டைய கிளப்பினார். ரோஹித் சர்மா 12, ராகுல் 0, ஆகியோர் சோபிக்காதபோதிலும், நல்ல பங்களிப்பு செய்த கோலி 35 மற்றும் ஜடேஜா 35 ஆட்டமிழந்துவிட்டபோதிலும், 17 பந்தில் 33 ரன்களை விளாசி, சிக்ஸருடன் போட்டியை முடித்து கொடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார் ஹர்திக் பாண்டியா.
அந்த போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா 4ஆம் வரிசையில் இறக்கிவிடப்பட்டது, அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஜடேஜா சிறப்பாக ஆடி 29 பந்தில் 35 ரன்கள் அடித்து வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். அவரது இன்னிங்ஸ் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.