காமன்வெல்த் 2022: வெண்கலப்பதக்கத்தை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நடாலி ஸ்கைவர் 27 ரன்களையும், எமி ஜோன்ஸ் 26 ரன்களையும் எடுத்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் ஹெலி ஜெசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் சோபியா டிவைன் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தது. இதில் சூஸி பேட்ஸ் 20 ரன்களிலும், ஜார்ஜியா பிலிம்பெர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சோபியா டிவைன் அரைசதம் கடந்ததுடன், அணிக்கும் வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி நடப்பாண்டு காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றியது.
Win Big, Make Your Cricket Tales Now