
ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நியூஸிலாந்து அரசு எச்சரிக்கை செய்ததையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ள நியூஸிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டி நகரில் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட இருந்தது. ஆனால், போட்டி தொடங்க சில மணி நேரத்துக்கு முன் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சம், நியூஸிலாந்து பாதுகாப்பு ஆலோசகர்களின் அறிவுரை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடனான தொடரைத் தொடர முடியாது. ஆதலால், தொடரை ரத்து செய்து உடனடியாக நியூஸிலாந்து வீரர்கள் நாடு திரும்புவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.