
பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார். ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பாரபட்சமே பார்க்காமல் பந்தாடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சில ஷாட்களை இதுவரை தான் பார்த்ததே இல்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் ஓபனாக பேசும் அளவிற்கு தரமான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினார்.
தொடர்ச்சியாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர துவக்க வீரர் ஃபின் ஆலென், சூரியகுமார் யாதவ் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் விராட் கோலியை விட பிடித்த வீரராக மாறிவிட்டார் என்று பாராட்டி பேசியுள்ளார்.