
இந்தியா - இலங்கை இடையே பெங்களூருவில் நடந்துவரும் பகலிரவு (2வது) டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, பும்ராவின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 109 ரன்களுக்கே சுருண்டது இலங்கை அணி. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
143 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டனும் மற்றொரு தொடக்க வீரருமான ரோஹித் சர்மா சிறப்பாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்து 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 35 ரன்னிலும், விராட் கோலி 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.