
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் அனுஜ் ராவத் (0) மற்றும் டுப்ளெசிஸ் (8) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். கோலி 12 ரன்னில் ரன் அவுட்டானார். பிரபுதேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 55 ரன்னில் ஆட்டமிழக்க, 11.2 ஓவரில் 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி அணி.
அதன்பின்னர் தினேஷ் கார்த்திக்கும் ஷபாஸ் அகமதுவும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடினர். களத்தில் நிலைத்தபின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். 17 ஓவரில் ஆர்சிபி அணி 132 ரன்கள் அடித்திருந்த நிலையில், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்தார் தினேஷ் கார்த்திக்.