
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்து அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் நிறைந்த ஒரு வீரராக இருக்கும் மகேந்திர சிங் தோனி இன்று தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி நகரில் பிறந்த தோனி தனது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு இந்திய அணிக்காக அறிமுகமாகினார்.
அப்படி இந்திய அணிக்காக அறிமுகமாகிய முதல் போட்டியின் போது தான் சந்தித்த முதல் பந்திலயே ஆட்டம் இழந்த அவர் அதன் பிறகு கங்குலியின் அசாத்தியமான நம்பிக்கை காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து அதன் பின்னர் தொட்டதெல்லாம் வெற்றி என்ற அளவிற்கு தனது முன்னேற்றத்தை மின்னல் வேகத்தில் அளித்து இந்திய கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சி அடைந்தார்.
இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவரது அதிரடி பலரையும் வியக்க வைத்தது. அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பினை ஏற்ற தோனி முதல் முறையாக ஐசிசி நடத்திய டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்று தந்த மகத்தான கேப்டனாக மாறினார். அதனைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்று தந்த ஒரே கேப்டனாக பெயர் எடுத்தார்.