
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 12) லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றியும், ஸ்மிருதி மந்தானா 25 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த பூனம் ராவத், மிதாலி ராஜ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தியது.
இதில் பூனம் ராவத் அரைசதம் கடந்தார். அதன்பின் 77 ரன்களில் பூனம் ராவத் வெளியேற, அவரைத்தொடர்ந்து மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 36 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை எடுத்தது.