
டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இதையடுத்து அடிலெய்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்தில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்த உலக கோப்பையில் செம ஃபார்மில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, சூப்பர் 12 சுற்றில் 3 அரைசதங்கள் அடித்த நிலையில், இந்த போட்டியிலும் பொறுப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார்.
அரைசதம் அடித்த கோலி 50 ரன்களுக்கு கிறிஸ் ஜோர்டானின் பந்தில் அடில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து 18ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கோலியுடன் இணைந்து அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா, கோலி ஆட்டமிழந்த பின்னரும் அதிரடியை தொடர்ந்தார். சாம் கரன் வீசிய 19ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். அந்த ஓவரில் ரிஷப் பண்ட்டும் ஒரு பவுண்டரி அடிக்க, 19ஆவது ஓவரில் இந்திய அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது.