
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 7 (11) ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
அடுத்ததாக எதிர்பாராத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆவது இடத்தில் களமிறங்கினார். வழக்கமாக அந்த அணியில் 3 -வது விக்கெட்டுக்கு கேப்டன் சாஞ்சு சாம்சன் களமிறங்குவார். இருப்பினும் அற்புதமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த அஸ்வின் 38 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வினின் முதல் அரைசதம் இதுவாகும்.
இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 (19) ரன்களில் அவுட்டாகி வெளியேறியபோது அப்போதும் இறங்காத சாஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல்லை அனுப்பினர். அவரும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் பங்கிற்கு 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 6 (4) ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை விரட்டிய டெல்லி அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து 19வது ஓவரில் வெற்றி பெற்றது. .