இந்த ஆட்டத்தில் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (பிப்ரவரி 6) தொடங்கிய. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 43 ரன்களையும், பென் டக்கெட் 33 ரன்களையும் சேர்த்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களிலும், ஜேக்கோப் பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களிலும், அக்ஸர் படேல் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஹர்திக் பாண்டியா 9 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 39.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “இந்த ஆட்டத்தில் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. பவர்பிளேயில் அருமையான தொடக்கம் கிடைத்ததாக நினைத்தேன். தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை இழந்தது வெறுப்பூட்டுவதாக இருந்தது. இப்போட்டியில் கூடுதலாக 40-50 ரன்கள் எடுத்திருந்தால் அது முக்கியமானதாக இருந்திருக்கும்.
நாங்கள் இப்படி விளையாட விரும்பவில்லை. எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, வேகத்தைத் தக்கவைக்க விரும்புகிறோம். மேலும் எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் நன்றாகத் தொடங்கினார்கள், அவர்கள் 20 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அந்த நேரத்தில், ஆட்டம் சமநிலையில் இருந்தது. அந்த சமயத்தில் நாங்கள் மேலும் ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால், நிச்சயம் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்திருக்கும்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். அதனால் நாங்கள் நீண்ட நேரம் சிறப்பாக விளையாட விரும்புகிறோம், நாங்கள் சரியானதைச் செய்கிறோம் என்பதை படிப்படியாகக் காட்டியுள்ளோம். எங்களுக்கு உந்துதல் இருக்கும்போது, அதை நீண்ட நேரம் நீட்டிக்க முயற்சிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.