ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 மேஜிக் மீண்டும் நிகழ்த்துவோம் என்று கூறி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமானது. அந்த நிலைமையில் இன்று ராவில்பிண்டி நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி – பென் டக்கெட் ஆகியோர் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து பவர் பிளே போல ஆரம்பம் முதலே அதிரடியாக குவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை தோற்கடித்த அதே யுக்தியை இப்போட்டியிலும் கையாண்ட இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியான பவுண்டரிகளை தெறிக்க விட்டது.

Advertisement

அதிலும் குறிப்பாக உலகிலேயே தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணி என்று கருதப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் இருவருமே சதமடித்து வெறும் 35.4 ஓவரில் 233 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 15 பவுண்டரியுடன் பென் டன்கட் 107 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் வெளுத்து வாங்கிய ஜாக் கிராவ்லி 21 பவுண்டரியுடன் 122 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜோ ரூட் சற்று கருணையுடன் 23 ரன்களிலேயே ஆட்டமிழந்து சென்றார். ஏனெனில் அவருடன் களமிறங்கிய மற்றொரு வீரர் ஒல்லி போப் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 14 பவுண்டரியுடன் சதமடித்து 108  ரன்கள் விளாசி மகிழ்ச்சியுடன் அவுட்டானார்.

அப்படி விஸ்வரூபம் எடுத்து புரட்டி எடுத்த இங்கிலாந்தை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நின்ற கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு தெம்பாக களமிறங்கி அடித்த அண்டர்-19 இளம் வீரர் ஹரி ப்ரூக் தனது பங்கிற்கு கருணை காட்டாமல் வெறித்தனமாக பேட்டிங் செய்தார். அதற்கு முன் சதமடித்த வீரர்களை விட ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை தெறிக்க விட்டு மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 14 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 101 ரன்களும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்களும் எடுத்ததால் 75 ஓவரிலேயே 506/4 ரன்கள் கடந்த இங்கிலாந்து 600 ரன்கள் நோக்கி பயணித்தது.

நல்ல வேலையாக போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் முதல் நாள் போட்டி முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்ததை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் 506 ரன்கள் குவித்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்த முதல் அணி என்ற வரலாற்று உலக சாதனை படைத்தது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் 112 வருட உலக சாதனையும் தகர்த்து புதிய சாதனை படைத்தது. 

  • இங்கிலாந்து : 506/4, பாகிஸ்தானுக்கு எதிராக, ராவில்பிண்டி 2022*
  • ஆஸ்திரேலியா : 496/4, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, சிட்னி, 1910

அத்துடன் முதல் நாளிலேயே 4 வீரர்கள் சதமடித்து 500 ரன்களை கடக்க உதவியதால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 4 சதத்தை பதிவு செய்த முதல் அணி என்ற புதிய உலக சாதனையும் இங்கிலாந்து படைத்தது. இப்படி சொந்த மண்ணில் மோசமாக செயல்பட்டு இங்கிலாந்திடம் முரட்டு அடி வாங்கிய பாகிஸ்தானை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News